தமிழகம்

தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்ள சாம்சங், ஆப்பிள், அமேசான் நிறுவனங்களுக்கு அழைப்பு- 13 முன்னணி நிறுவன தலைவர்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ளும்படி சாம்சங், ஹெச்பி, ஆப்பிள், அமேசான் உள்ளிட்ட 13 நிறுவனங்களின் தலைவர்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து தொழில்துறை செயலர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

வெளிநாடு முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்ப்பதில் பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். யாதும் ஊரே திட்டம், நாடுகளுக்கான சிறப்பு அமைவுகள், வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மின்னணுவியல் துறையில்

தற்பொழுது உலக அளவில் மின்னணுவியல் துறையில் தலைசிறந்த 13 முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை, தமிழகத்தில் முதலீடு செய்ய நேரடியாக அழைப்பு விடுத்து தனிப்பட்ட முறையில் முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கரோனா வைரஸ் உலக பொருளாதார சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால் சில நாடுகளில்உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவில் மேற்கொள்ள முடிவு எடுத்துள்ளன. அம் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ‘முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணிக்குழு’வை தலைமைச் செயலர் தலைமையில் முதல்வர் பழனிசாமி அமைத்துள்ளார்.

சமீபத்தில் ரூ.15,128 கோடி முதலீட்டில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டன. இது, இந்த பேரிடர் காலத்திலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள தலைசிறந்த இடமாக, தமிழகத்தை கருதுவதை எடுத்துக் காட்டுகிறது.

உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க ஈர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது, ஆப்பிள் நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் டிம் குக், சாம்சங் நிறுவன தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் கிம் குன் சுக், அமேசான் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் ஜெப் பெசாஸ், ஹெச் பிநிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலர் என்ரிக் உள்ளிட்ட 13 முன்னணி மின்னணுவியல் நிறுவனங்களின் தலைவர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய நேரடியாக அழைப்பு விடுத்து முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

ஊக்கச் சலுகைகள் வழங்கப்படும்

மேலும், தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ளபல்வேறு சாதக அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பானஆதரவை அளிக்கும் என்றும்,தேவைகளுக்கு ஏற்ப ஊக்கச் சலுகைகள் வழங்கும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு சிறப்பான ஆதரவை அளிக்கும் என்றும், தேவைகளுக்கு ஏற்ப ஊக்கச் சலுகைகள் வழங்கும் என்றும் கடிதத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT