தமிழகம்

6 மாதமாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம்: ஊரடங்கு முடிந்து திறக்க அரசு முடிவு

கி.மகாராஜன்

திருப்பரங்குன்றத்தில் 6 மாதங்களுக் முன்பு கட்டி முடிக்கப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் உள்ள 40 படுக்கை வசதி கொண்ட அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம் ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு திறக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

மதுரை அதலையைச் சேர்ந்த புஷ்பவனம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

கரோனா பரவல் அதிகரிக்கும் சூழலில் தனியார் கல்லூரிகள், விடுதிகள், பள்ளிகள், சமுதாய கூடங்கள் தனிமை முகாம்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

ஆனால் திருப்பரங்குன்றத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன் கட்டி முடிக்கப்பட்ட 40 படுக்கைகளுடன் கூடிய அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

இந்த கட்டிடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் அவசர விபத்து சிகிச்சை மற்றும் மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதில்லை. எனவே கூடுதல் கட்டிடத்தை திறக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார்.

அரசு வழக்கறிஞர் ஆயிரம் கே.செல்வக்குமார் வாதிடுகையில், மருத்துவமனை கூடுதல் கட்டிடத்தை பொதுப்பணித் துறையினர் மருத்துவத் துறையிடம் ஒப்படைத்துவிட்டனர்.

கரோனா ஊரடங்கால் திறப்பு தாமதமாகி வருகிறது. ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திறக்கப்படும் என்றார். இதை பதிவு செய்து மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT