சிவகங்கை மாவட்டத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த மேலும் 2 கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரில் 9 பேர், இளையான்குடி, தேவகோட்டை, காரைக்குடியில் தலா ஒருவர் என 12 பேருக்கு ஏற்கனவே கரோனா தொற்று இருந்தது. அவர்கள் அனைவரும் குணமடைந்ததால் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாறியது.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்டனர். அவர்கள் காரைக்குடி அமராவதிப் புதூர் , சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு ஏற்கெனவே எடுக்கப்பட்ட பரிசோதனையில் மகாராஷ்டிரா, மேற்குவங்க மாநிலங்களில் இருந்து வந்த 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதில் நேற்று வரை 14 பேர் குணமடைந்தனர்.
இந்நிலையில் இன்று சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே கருங்காப்பட்டியைச் சேர்ந்த 65 வயது ஆண், மானாமதுரை அருகே டி.ஆலங்குளத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என 2 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது. தற்போது 5 பேர் சிகிச்சையில் உள்ளனர்.