துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: கோப்புப்படம் 
தமிழகம்

முழு உடல் பரிசோதனைக்காக அனுமதி; இன்று மாலை வீடு திரும்புகிறார் ஓபிஎஸ்; மருத்துவமனை நிர்வாகம் தகவல்

செய்திப்பிரிவு

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலை அவர் வீடு திரும்புவார் எனவும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சமீபத்தில் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட சமீபத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்துகொண்டார்.

இந்நிலையில், நேற்று (மே 24) மாலை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று (மே 25) காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவமனைக்கு நேரில் சென்று துணை முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

இந்நிலையில், துணை முதல்வர் நலமாக இருப்பதாகவும், இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, இன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்தி வெளியீட்டில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முழு உடல் பரிசோதனைக்காக நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இன்று மருத்துவக் குழுவினரால் பரிசோதிக்கப்பட்டதில் அவர் உடல்நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலை துணை முதல்வர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

          
SCROLL FOR NEXT