கடலில் மூழ்கி இறந்த முருகவேல் மற்றும் மோகன் 
தமிழகம்

மரக்காணம் அருகே கடலில் மாயமான பள்ளி மாணவர் உட்பட 2 பேரின் உடல் கரை ஒதுங்கியது

எஸ்.நீலவண்ணன்

மரக்காணம் அருகே கடலில் மாயமான பள்ளி மாணவர் உட்பட 2 பேரின் உடல் இன்று காலை கரை ஒதுங்கியது.

மரக்காணம் அருகே கரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னகுட்டி மகன் முருகவேல் (19). இவர் மரக்காணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்தாண்டு பிளஸ் டூ தேர்வு எழுதியுள்ளார். இவரும், இவரது நண்பரான அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மோகன் (22) மற்றும் 3 பேருடன் நேற்று (மே 24) பிற்பகல் தீர்த்தவாரி கடலில் குளித்தனர்.

கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் அலைகள் வழக்கமான உயரத்தைவிட அதிக அளவு உயரத்துடன் ஆக்ரோஷமாக கரையை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது, முருகவேலை அலைகள் கடலுக்குள் இழுத்துச் சென்றது.

இதைக்கண்ட மோகன், முருகவேலை காப்பாற்ற முயன்றபோது அவரும் மாயமானார். உடன் குளித்துக்கொண்டிருந்த மற்றவர்கள் மரக்காணம் போலீஸார் மற்றும் கடலோர காவல்படைக்குத் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாயமான இருவரையும் தேடும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் இன்று (மே 25) காலை இருவரின் உடலும் அப்பகுதியில் கரை ஒதுங்கியது. இதையடுத்து இருவரது உடலையும் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT