தமிழகம்

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதால் பிஎஸ்.4 வகை வாகன பதிவு தற்காலிகமாக நிறுத்தம்

செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருவதால், ஆர்டிஓ.களில் பிஎஸ்.4வகை வாகனப் பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சுற்றுசூழல் மாசடைவதற்கு வாகனப் புகையும் ஓர் காரணமாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் பிஎஸ்.4 ரக வாகனங்களை 2020 ஏப்ரல் முதல் விற்பனைசெய்யக் கூடாது என 2018-ம்ஆண்டு அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், நாடுமுழுவதும் ஊரடங்குஅமலில் உள்ளதால் பிஎஸ்.4 வாகனங்களை விற்க முடியாமல் நிறுவனங்கள் தவித்து வருகின்றன.

இதற்கிடையே, பிஎஸ்.4 வகை வாகனங்களை விற்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், ‘‘ஊரடங்கு முடிந்ததும் அடுத்த 10 நாட்களுக்கு விற்பனை செய்யலாம். ஆனால், டெல்லி - என்சிஆர் பகுதியில் இந்த வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது’’ என கடந்த மார்ச் மாதம் அறிவித்தனர்.

கரோனா ஊரடங்கு முடியாத சூழலில், மேலும் கால அவகாசம் கேட்டு ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் கூட்டமைப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் ஆர்டிஓ.களில் பிஎஸ்.4வாகனங்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டுள்ளதால், குறைந்த அலுவலர்களை கொண்டுஆர்டிஓ.கள் செயல்பட்டு வருகின்றன. ஓட்டுநர் உரிமம், பிஎஸ்.6 வாகன பதிவு உள்ளிட்ட சேவையைவழங்கி வருகிறோம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதால் பிஎஸ்.4 வகை வாகனங்கள் பதிவு செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அரசின் வழிகாட்டுதல்படி, நாங்கள் செயல்படுவோம்’’ என்றனர்.

SCROLL FOR NEXT