உம்பன் புயல் தாக்கம் காரணமாக ஈரப்பதம் உறிஞ்சப்பட்ட நிலையில் தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், மேலும் 2 நாட்களுக்கு தமிழத்தின் 11 மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த சென்னை வானிலை ஆய்வு மையத்தகவல் :
“தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் நிதானமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிக பட்ச வெப்ப நிலையானது 40 - 42 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை ஒட்டி இருக்கும்.
இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக நீலகிரி மாவட்டத்தில் 7 செ.மீ. மழையும், அதற்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி மற்றும் சேலம் மாவட்டத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலையானது 40 டிகிரி செல்ஷியஸ் குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்ஷியஸும் பதிவாகும்”.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.