தமிழகத்தில் எவ்வித இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது என உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் நேற்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமை வகித்த இந்த நிகழ்ச்சியில் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்று பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியது:
அரசு வலியுறுத்திய சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிப்பதில் பொதுமக்கள் அளித்த சிறப்பான ஒத்துழைப்பால் தருமபுரி மாவட்டத்தில் பெரிய அளவில் கரோனா தொற்று இல்லாத நிலை உருவாகியுள்ளது. அனைவரும் தொடர்ந்து சமூக இடைவெளியை பின்பற்றுங்கள்.
சுனாமி, புயல், தொற்றுநோய் உள்ளிட்ட எந்த விதமான இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும் அதை எதிர்கொண்டு மாநில மக்களை காக்க தயாரான நிலையில் தமிழக அரசு எப்போதும் உள்ளது.
இவ்வாறு பேசினார்.