வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் பொதுமக்கள் குழந்தைகள், வயதானவர்கள் பகலில் 11 மணிமுதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்கும்படி சென்னை வானிலை ஆய்வு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான உம்பன் புயல் வலுவான சூப்பர் புயலாக மாறி ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் நோக்கிச் சென்றது. தற்போது அது மேற்கு வங்கம்- வங்கதேசம் இடையே கரையைக் கடந்தது. புயல் தாக்கம் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் கடுமையாக அதிகரித்துள்ளது.
காற்றின் ஈரப்பதத்தை புயல் இழுத்துச் செல்வதால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்கமான வெப்ப நிலையை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நேற்று முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவல்:
“உம்பன் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கரையை கடந்து விட்ட நிலையில் வெப்பத்தின் தாக்கம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது, குறிப்பாக வட தமிழக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இன்று முதல் வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து அனல் காற்று வீசும்.வட தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் 11 மணி முதல் 3.30 வரை காரணமின்றி வெளியே வரவேண்டாம்”.
இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்து வரும் நாட்களில் எதிர்பார்க்கப்படும் வெப்ப அளவு.
மே 21-ம் தேதி குறைந்தபட்ச வெப்பநிலை 29°C (82°.2.F) ஆகவும் அதிகபட்சம் 42°C (107°.6 F) ஆகவும் இருக்கும்,
மே 22-ம் தேதி குறைந்தபட்ச வெப்பநிலை 29°C (82°.2.F) ஆகவும் அதிகபட்சம் 42°C (107°.6 F) ஆகவும் இருக்கும்.
மே 23-ம் தேதி அன்று குறைந்தபட்ச வெப்பநிலை 29°C (82°.2.F) ஆகவும் அதிகபட்சம் 42°C (107°.6 F) ஆகவும் இருக்கும்.
மே 24-ம் தேதி அன்று குறைந்தபட்ச வெப்பநிலை 29°C (82°.2.F) ஆகவும் அதிகபட்சம் 42°C (107°.6 F) ஆகவும் இருக்கும் .
மே 25 அன்று குறைந்தபட்ச வெப்பநிலை 29°C (82°.2.F) ஆகவும் அதிகபட்சம் 42°C (107°.6 F) ஆகவும் இருக்கும்.
மே 26 குறைந்தபட்ச வெப்பநிலை 29°C ஆகவும் அதிகபட்சம் 42°C ஆகவும் இருக்கும். அதாவது அடுத்த செவ்வாய்க்கிழமை வரை இந்த வெப்பநிலை நீடிக்கும்.