கரோனா பிரச்சினையால் உணவின்றித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் சார்பில் தினமும் உணவு வழங்கப்படுகிறது.
ஈஷா யோகா மையம் அமைந்துள்ள தொண்டமுத்தூர் பகுதி முழுவதும் பல்வேறு நிவாரணப் பணிகளில் ஈஷா தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். முட்டத்து வயல், முள்ளாங்காடு, மடக்காடு, ஜாகிர்நாயக்கன்பதி, சீங்கபதி போன்ற மலைவாழ் கிராமங்கள், செம்மேடு, ஆலாந்துறை, பூலுவப்பட்டி உட்பட ஏராளமான கிராமங்களுக்கு ஈஷா மையம் உதவி வருகிறது.
ஒவ்வொரு ஊராட்சியிலும் உணவின்றித் தவிக்கும் மக்களின் விவரங்களை சேகரித்து, அவர்களது வீடுகளுக்கே சென்று ஈஷா தன்னார்வலர்கள் உணவும், நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீரும் வழங்கி வருகின்றனர்.
இதுதவிர, கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் முகக் கவசம் மற்றும் சானிடைசர் வழங்கப்படுகின்றன.
பூலுவப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்துதல் வார்டு அமைக்கத் தேவையான உதவிகளை ஈஷா செய்துள்ளது என்று ஈஷா யோகா மையத்தினர் தெரிவித்துள்ளனர்.