2018-19-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை வராதவர்களுக்கு உடனடியாக வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸார் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.பிரேம்குமார் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.உமாசங்கர், விவசாயிகள் சௌந்திரராஜன், பாலகிருஷ்ணன், பால்ராஜ் உள்ளிட்டோர் வந்தனர்.
அவர்கள், 2018-19-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை வரப்பெறாதவர்களுக்கு உடனடியாக வழங்க வலியுறுத்தி தரையில் முட்டி போட்டும், தோப்பு கரணம் போட்டும் கோஷங்கள் முழங்கினர்.
பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் ஜே.விஜயாவிடம் வழங்கிய மனுவில், 2018-19-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு உறுதி செய்யப்பட்டு சுமார் 60 சதவீத விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள விவசாயிகளுக்கு கூட்டுப்பட்டா உள்ளிட்ட சில காரணங்களால் காப்பீட்டு தொகை வரவில்லை. இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மனுக்கள பெறப்பட்டன. ஆனால், அந்த மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், காப்பீட்டு நிறுவனங்கள் குறுகிய காலத்தில் காப்பீட்டு வர்த்தகத்தை முடிக்கப்போவதாக அறிந்தோம். எனவே, அலட்சியமாக செயல்படும் வேளாண் துறை உரிய நடவடிக்கை எடுத்து துரிதமாக விவசாயிகள் பயன்பெற ஆவண செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளனர்.