தமிழகம்

மகன் இறந்ததால் மகாராஷ்டிரா தொழிலாளி சொந்த ஊர் திரும்ப தனி கார் ஏற்பாடு செய்த தேனி எஸ்.பி.

என்.கணேஷ்ராஜ்

மகாராஷ்டிராவில் மகன் இறந்ததால் கரும்பு வெட்டும் தொழிலாளி தேனியில் இருந்து தனி காரில் அனுப்பிவைக்கப்பட்டார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை அருகே தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கரும்பு வெட்டும் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

கரோனா ஊரடங்கினால் தற்போது இவர்கள் ஆலை வளாகத்தில் தங்கி உள்ளனர். அவர்களை சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரயிலில் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இவர்களை ஆய்வு செய்ய எஸ்பி.சாய்சரண் தேஜஸ்வி சென்றார். அப்போது அங்கிருந்த கழுஜாதன், தனது மகன் சொந்த ஊரில் இறந்துவிட்டார். இறுதிச் சடங்கு செய்ய வேண்டும். எனவே விரைவில் தன்னை அனுப்பும்படி கதறி அழுதார்.

இதனைத் தொடர்ந்து எஸ்பி.சாய்சரண் தேஜஸ்வி மாவட்ட நிர்வாகத்திடம் பேசி இ.பாஸ் அனுமதி பெற்றார். மேலும் ஆலை நிர்வாகம் மூலம் ஒரு கார் ஏற்பாடு செய்து மகாராஷ்ட்ரா மாநிலம் யவாத்மால் எனும் இடத்திற்கு அனுப்பிவைத்தார்.

மற்ற தொழிலாளர்கள் சில நாட்களில் ரயிலில் அனுப்பிவைக்கப்பட உள்ளனர்.

SCROLL FOR NEXT