தமிழகம்

ராகுல் காந்தி விளம்பர மனநிலையுடன் செயல்பட்டு வருகிறார்: பொன் ராதாகிருஷ்ணன் 

எல்.மோகன்

ராகுல் காந்தி விளம்பர மனநிலையுடன் செயல்பட்டு வருகிறார். ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடக்கூடாது. எது செய்தாலும் விளம்பரத்திற்காக செய்யக்கூடாது. இது கடுமையான பாதிப்புகள் உள்ள கால கட்டமாகும். எனவே இந்த காலகட்டத்தில் இப்படி செய்யக்கூடாது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

நாகர்கோவிலில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டும். முறைப்படி பத்தாம் வகுப்பு தேர்வு ஒரு மாதத்திற்கு முன்பு நடந்திருக்க வேண்டும். இந்த தேர்வுகளை நடத்தா விட்டால் அடுத்த நிலைக்கு மாணவர்கள் போவதற்கு சிரமம் அடைவார்கள்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக மே மாதம் முழுவதும் பள்ளிகள் அடைக்கப்பட்டுள்ளது. இப்போது அவர்கள் தேர்வு எழுதி முடிவுகள் வெளியானால்தான் குறைந்தபட்சம் ஜூலை மாதத்தில் அவர்கள் மேற்படிப்புக்கு செல்ல முடியும்.

காசி விவகாரத்தில் அவர் தமிழ்நாட்டு பெண் குலத்திற்கு மிகப்பெரிய அவமானம் ஏற்படுத்தியுள்ளார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் வழக்கில் வக்கீல்கள் ஆஜராகக் கூடாது என்று முடிவு எடுத்துள்ளனர். இது மகிழ்ச்சியான விஷயம். காவல் துறை அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு வருமானம் போதவில்லை என்று நினைத்து மதுபான கடைகளின் நேரத்தை அதிகரித்திருக்கலாம். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT