பாம்பனில் சேதமடைந்த நாட்டு மற்றும் பைபர் படகுகள் 
தமிழகம்

உம்பன் புயலால் பாம்பன், மண்டபத்தில் சூறாவளி 100 படகுகள் மோதி பலத்த சேதம்

செய்திப்பிரிவு

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள உம்பன் புயல் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து தெற்காக 790 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்கத்தின் திஹா நகரில் இருந்து 940 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இப்புயல் நாளை பிற்பகல் மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ராமேசுவரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் திங்கட்கிழமை அதிகாலை தூறல் மழையுடன் பலத்த சூறாவளி வீசியது. இதனால் பாம்பன், மண்டபம் ஆகிய மீன்பிடி இறங்கு தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு, பைபர் மற்றும் விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன. சூறாவளியால் பல படகுகள் கரை ஒதுங்கின. இது குறித்து மீனவர்கள் தெரி விக்கையில், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் சுமார் 100 படகுகள் சேதமடைந்துள்ளன. இவற்றை சீரமைக்க தலா ரூ.1 லட்சம் வரை செலவாகும் என வேதனையுடன் கூறினர். சூறாவளியால் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தன. இதனால் ராமேசுவரம் தீவு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT