தமிழகம்

மதுரை ரயில் நிலையத்துக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ்

என்.சன்னாசி

மதுரை ரயில் நிலையத்திற்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது என கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்திலுள்ள முக்கிய ரயில் நிலையங்களில் மதுரையும் ஒன்று. பாண்டியன், வைகை, தேஜஸ் போன்ற சில ரயில்கள் மதுரையில் இருந்து இயக்கப்பட்டாலும், மேலும், திருவனந்தபுரம் கோட்டம் மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து இந்த ரயில் நிலையம் வழியாக தினமும் 90க்கும் மேற்பட்ட ரயில்கள் இயங்குகின்றன.

தினந்தோறும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேலான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள 6 நடைமேடைகளில் ரயில்களைக் கையாண்டாலும், முதலாவது நடைமேடையில் பயணிகளுக்கான குளிரூட்டிய ஓய்வறைகள், ஐஆர்சிடிசி தங்கும் அறைகள், இரண்டாம் வகுப்புப் பயணிக்களுக்கான காத்திருப்பு அறைகள் மற்றும் நிலைய மேலாளர், டிக்கெட் பரிசோதகர்கள் அலுவலகம் என முக்கிய அலுவலகங்களும் இந்த நடைமேடையில் செயல்படுகின்றன.

தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு நல்ல வருவாய் ஈட்டித் தருவதிலும் மதுரை கோட்டம் முதலிடத்தில் உள்ளது. இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளிலும் முதன்மை பெறுவதால் மதுரை ரயில் நிலையத்திற்கு ஐஎஸ்ஓ தரச் சான்று கிடைத்துள்ளது என கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், ''முறையான நேரத்தில் ரயில்களை இயக்குதல், சிக்னல்களை சிறப்பாகச் செயல்படுத்துதல், நிலையம், தொலைத்தொடர்புகளை நன்றாகப் பராமரித்தல், கிழக்கு, மேற்கு நுழைவு வாயில்களை அழகுபடுத்துதல், டிக்கெட் முன்பதிவு மற்றும் அதிக பார்சல்களைக் கையாளுவதில் கவனம், சுற்றுச்சூழல் பேணுதல், பயணிகளுக்கான பாதுகாப்பு உறுதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது'' என்றனர்.

SCROLL FOR NEXT