உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து நாளை மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒரு கடைக்கு 500 பேருக்கு மட்டுமே மது விற்பனை, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மது விற்பனை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மது விற்பனையை ஊரடங்கு தளர்த்தப்பட்டப்பின் மே.7 அன்று அரசு அனுமதித்தது. பலரது எதிர்ப்பையும் மீறி திறக்கப்பட்ட மதுபான கடையில் கூட்டம் அலைமோதியது. சமூக விலகல் கேள்விக்குறியானது.
2 நாளில் பண்டிகைக் காலம் போல் ரூ.294.5 கோடிக்கு மது விற்பனை ஆனது. இதனால் உயர் நீதிமன்றம் நிபந்தனைகளை கடைபிடிக்காததை குறிப்பிட்டு மது விற்பனைக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இதில் சில நிபந்தனைகளுடன் தடை நீக்கப்பட்டது. அதன்படி நாளை மதுபானக்கடைகளை திறக்கும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி நாளை பெருநகர சென்னை காவல் எல்லை, திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மாநிலம் முழுவதும் மதுபான கடைகள் திறக்கப்படுகிறது.
அதன்படி கூட்டம் அலைமோதுவதை தடுக்க 7 நாட்களுக்கு 7 வண்ண டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. கிழமை வாரியாக வழங்கப்படும் டோக்கன்களில் கிழமைக்கான வண்ண டோக்கன் உள்ளவர்கள் அதில் குறிப்பிட்ட நேரப்படி மது வாங்க அனுமதிக்கப்படுவார்கள்.
காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மது விற்கப்படும். மது வாங்க வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். சமூக விலகல் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். டோக்கன் வழங்குவதற்கு தனித்தனி கவுன்டர்கள் இருக்கும் நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 பேருக்கு மட்டுமே மதுபான விற்பனை.
உள்ளிட்ட அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.