தமிழகம்

தமிழகத்தில் இன்று 447 பேருக்கு கரோனா; சென்னையில் 363 பேர் பாதிப்பு: 10 ஆயிரத்தை நெருங்கும் தமிழகம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் இன்று 447 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தொற்று அனைத்தும் கோயம்பேடு சந்தை தொடர்புடையவை.

சென்னையில் 363 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 5,274 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 5,637 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தொற்று எண்ணிக்கையில் 81.2 சதவீதத் தொற்று எண்ணிக்கை சென்னையில் உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 9,674-ல் சென்னையில் மட்டும் 5,637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 58.1 சதவீதம் ஆகும்.

மொத்த எண்ணிக்கையில் 64 பேர் இறந்துள்ள நிலையில் இறப்பு சதவீதம் .68% என்கிற அளவில் உள்ளது. மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 23.1 சதவீதமாக உள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தொடர்ச்சியாக மருத்துவ சோதனையில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

ஊரடங்கு காலத்தில் வீட்டில் தனிமையில் இருப்பது குறித்து அரசு வலியுறுத்தி வந்தபோதும் பலரும் அதைக் கடைப்பிடிப்பதில்லை. தனி மனித இடைவெளி, முகக்கவசம் அணியாமல் இருப்பது என இருப்பதால் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.

கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்றும் கரோனா பாதிப்பு உள்ளோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களின் தினசரி எண்ணிக்கையைவிட ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து வருகிறது. சென்னையும் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிக அளவு எண்ணிக்கையுடன் முதலிடத்தில் உள்ளது.

மகாராஷ்டிராவில் 25,922 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் 9,674 எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. குஜராத் அதற்கு அடுத்த இடத்தில் 9,267 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. டெல்லியில் கரோனா தொற்று எண்ணிக்கை 7,998 ஆக உள்ளது.

சென்னையைத் தவிர மீதியுள்ள 13 மாவட்டங்களில் 84 பேருக்குத் தொற்று உள்ளது. 24 மாவட்டங்களில் தொற்று இன்று இல்லை. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் மூன்று இலக்கத்தில் எண்ணிக்கை உள்ளது.

* தற்போது 38 அரசு ஆய்வகங்கள், 20 தனியார் ஆய்வகங்கள் என 58 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக, சிகிச்சையில் உள்ளவர்கள் 7,365 பேர்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,91,432.

* மாதிரி எடுக்கப்பட்ட தனி நபர்களின் எண்ணிக்கை 2,80,023.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 11,965.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 9,476.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 447.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 253 பேர். பெண்கள் 194 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 64 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,240 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 2 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 66 ஆக உள்ளது.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 363 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் 5,274 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 5,637ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தின் பெருநகரங்களில் சென்னை மட்டும் 5000 என்ற தொற்று எண்ணிக்கையைக் கடந்த நகரமாக உள்ளது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கைகளைவிட அதிகம் உள்ளது. இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாகச் செல்கிறது.

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் 495, செங்கல்பட்டு 416, கடலூரில் 413, அரியலூர் 348, விழுப்புரத்தில் 306, காஞ்சிபுரத்தில்164, கோவையில் 146, பெரம்பலூரில் 137, திருவண்ணாமலையில் 136 என தொற்று எண்ணிக்கை உள்ளது. மதுரையில் 132, திருப்பூர் 114, திண்டுக்கல்லில் 112 என்ற அளவில் தொற்று எண்ணிக்கை உள்ளது. இவைதான் மூன்று இலக்க எண்ணிக்கையில் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

14 மாவட்டங்களில் மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற 23 மாவட்டங்களில் தொற்று இல்லை. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 555 பேர். இதில் ஆண் குழந்தைகள் 303 பேர். பெண் குழந்தைகள் 252 பேர்.

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 8,444 பேர். இதில் ஆண்கள் 5,667பேர். பெண்கள் 2774 பேர். மூன்றாம் பாலினத்தவர் 3 பேர்.

60 வயதுக்கு மேற்பட்டோர் 675 பேர். இதில் ஆண்கள் 419 பேர். பெண்கள் 256 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT