தூத்துக்குடி அருகே படகில் ஓட்டை விழுந்து நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த பிரதீப் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் பிரதீப் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிரசாத், ஆரோக்கியம், ஜேம்ஸ், ஜெரால்டு, பிதலிஸ் ஆகியோர் நேற்று காலை 7 மணியளவில் திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் இன்று அதிகாலை தூத்துக்குடியில் இருந்து 35 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகில் ஓட்டை விழுந்து கடல்நீர் படகுக்குள் புகுந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளனர்.
அப்போது அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் அங்கு விரைந்து வந்து அவர்கள் 6 பேரையும், அவர்களது படகையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் திரேஸ்புரம் பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.