கோவில்பட்டியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான ராஜிவ் நகரில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார். 
தமிழகம்

கோவில்பட்டி, எட்டயபுரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு

எஸ்.கோமதி விநாயகம்

கோவில்பட்டி, எட்டயபுரத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆய்வு செய்தார்.

கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்களம் ஊராட்சி ராஜிவ் நகர் 6-வது தெரு பகுதியில் சென்னையில் இருந்து வந்த 65 வயது நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதே போல் எட்டயபுரம் அருகே இளம்புவனத்தில் செங்கல்பட்டில் இருந்து வந்த 27 வயது தொழிலாளிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில், ராஜிவ்நகர் பகுதியில் 778 வீடுகளில் 2636 மக்களும், இளம்புவனம் பகுதியில் 630 வீடுகளில் 2306 மக்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தனிமைபடுத்தபட்ட பகுதிகளை மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் ஆட்சியர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனிமைப்படுத்தபட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். மேலும், அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு தடுப்பு பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்பதற்காகவும், கரோனா வைரஸ் தொற்று நோய் பரவால் இருப்பதற்காகவும், நடமாடும் காய்கறி அங்காடி வாகனம் மூலம் காய்கறி வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.

ஆய்வின்போது கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, சுகாதார பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் அனிதா, வட்டாட்சியர்கள் மணிகண்டன், அழகர், கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசகம், வசந்தா, கோவில்பட்டி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் மற்றும் அலுவலர்கள், மருத்துவர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக கோவில்பட்டி மேலும் வ.உ.சி. பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தையை ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்து, காய்கறிகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், காய்கறிகளை வாங்கி கொண்டு இருந்த பொதுமக்களையும் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தினார்.

மேலும், கோவில்பட்டி பகுதியில் உள்ள கனரா வங்கிக்கு அதிகமான பொதுமக்கள் வங்கி சேவைக்காக வந்திருந்தனர். பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டு இருந்ததை பார்த்த மாவட்ட ஆட்சியர், வங்கி மேலாளரிடம் பொதுமக்கள் அமர்வதற்கு ஏதுவாக நாற்காலிகள் பயன்படுத்த வேண்டும். வங்கிகளுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசங்களை அணிந்து வர வேண்டும். வங்கி நுழைவு பகுதியில் சானிடைசர் வைத்து இருக்க வேண்டும். வங்கியில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களும், வங்கிக்கு வரும் பொதுமக்களும் முகக்கவசங்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை வங்கி மேலாளர் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

SCROLL FOR NEXT