தமிழகத்தில் ஜூன் 1 முதல் 12-ம் தேதி வரை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடைபெறும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (மே 12) தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:
"ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், வரும் ஜூன் 1 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும்.
கடந்த மார்ச் 26-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 1 வகுப்புத் தேர்வை எழுதாத மாணவர்கள், ஜூன் 2-ம் தேதி அத்தேர்வை எழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஏற்கெனவே விடுபட்ட பிளஸ் 1 தேர்வு, ஜூன் 4-ம் தேதி நடைபெறும்.
மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை 34 ஆயிரத்து 842 பேர் வாகனங்கள் குறைவால் எழுத முடியவில்லை என்ற செய்தி வெளியானது. அவர்கள் மீண்டும் ஜூன் 4 ஆம் தேதி அத்தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படுகிறது.
வரும் 27-ம் தேதியிலிருந்து 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தப்படும்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்துவிதமான சுகாதார வசதிகளும் செய்து தரப்படும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகளும் தேர்வுகளின்போது எடுக்கப்படும்.
பள்ளி திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முக்கியம் என்பதால் நடத்தப்படுகிறது".
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அப்போது, தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுவதாக எழுந்த புகார் குறித்து கூறுகையில், "மெட்ரிக் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25% நிதியை தமிழக அரசு அளித்திருக்கிறது. ஏறத்தாழ ரூ.218 கோடி நிதி நேரடியாக வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர்களைத் துன்புறுத்தவும், மன உளைச்சலையும் ஏற்படுத்தக் கூடாது என்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஏதேனும் புகார் இருந்தால் எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்குவது குறித்துக் கூறுகையில், "நீட் பயிற்சியைப் பொறுத்தவரையில் 2,000 ஆசிரியர்களுக்கு இருவார காலம் முதலில் பயிற்சி நடத்தப்பட உள்ளது. அடுத்த மாதத்தில் ஆர்வம் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 கல்லூரிகளில் பயிற்சி அளிக்க வசதி செய்துள்ளோம். தங்கும் வசதி, உணவு வசதியும் ஏற்பாடு செய்துள்ளோம்" என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.