ஓசூர் வட்டம் ஆலூர் கிராமத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு பண்ணை இயந்திரங்களை கிருஷ்ணகிரி வேளாண் துணை இயக்குனர் ஜக்குல்ல அக்கந்தராவ் வழங்கினார். உடன் ஓசூர் வேளாண் உதவி இயக்குனர் மனோகரன் மற்றும் பலர் உள்ளனர். 
தமிழகம்

கூட்டுப் பண்ணையத் திட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.35 லட்சத்தில் பண்ணை இயந்திரங்கள்

ஜோதி ரவிசுகுமார்

ஓசூரில் கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் மூலமாக உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.35 லட்சம் மானியத்தில் பண்ணை இயந்திரங்களை கிருஷ்ணகிரி வேளாண்மை துணை இயக்குனர் (மாநிலத் திட்டம்) ஜக்குல்ல அக்கந்தராவ் வழங்கினார்.

ஓசூர் வட்டாரத்தில் 2019- 20 ஆம் நிதியாண்டில் கூட்டுப் பண்ணையத் திட்டத்தில் ஆலூர், அச்செட்டிப்பள்ளி, நாகொண்டப்பள்ளி, கணுகொண்டப்பள்ளி, மல்லசந்திரம், தாசரிப்பள்ளி, காளகஸ்திபுரம் ஆகிய 7 வருவாய் கிராமங்களில் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானியத்தில் டிராக்டர், பவர் வீடர், சுழற்கலப்பை உள்ளிட்ட பண்ணை இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

இங்குள்ள ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள 20 விவசாயிகளை ஒருங்கிணைத்து ஓர் உழவர் ஆர்வலர் குழு வீதம் 5 உழவர் ஆர்வலர் குழுக்களும், அந்த 5 உழவர் ஆர்வலர் குழுக்களை ஒருங்கிணைத்து ஓர் உழவர் உற்பத்தியாளர் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களுக்குப் பண்ணை இயந்திரங்கள் வாங்க கூட்டுப் பண்ணையத் திட்டத்தில் ஓர் உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு ரூ.5 லட்சம் வீதம் 7 குழுக்களுக்கும் ரூ.35 லட்சம் மானியத்தில் பண்ணை இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி வேளாண்மை துணை இயக்குனர் (மாநிலத் திட்டம்) ஜக்குல்ல அக்கந்தராவ் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் ஓசூர் வேளாண்மை உதவி இயக்குனர் மனோகரன், வேளாண்மை அலுவலர் பன்னீர்செல்வம், துணை வேளாண்மை அலுவலர் முருகேசன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT