பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

விழுப்புரம் அருகே பள்ளி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிப்பு;  2 பேர் கைது

எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம் அருகே பெட்ரோல் ஊற்றி பள்ளி மாணவி தீ வைத்து எரிக்கப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவரின் பெற்றோர் நேற்று வெளியூருக்குச் சென்று விட்ட நிலையில் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இந்த நிலையில் அவளது வீட்டில் இருந்து அதிக அளவில் புகை வெளியேறியதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்றபோது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் மாணவி வலியால் அலறினார்.

உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த விழுப்புரம் நீதிபதியிடம், மாணவி தனது வீட்டுக்குள் அதே கிராமத்தைச் சேர்ந்த கணபதி மகன் முருகன் (51), கந்தசாமி மகன் யாசகம் என்கிற கலியபெருமாள் (60) ஆகியோர் தன்மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக வாக்குமூலம் அளித்தார். .

இதையடுத்து மாணவி மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் முருகன், யாசகம் என்கிற கலியபெருமாள் ஆகிய 2 பேரை நேற்று இரவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT