தமிழகம்

செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு 12 வயது குழந்தைகளும் சேரலாம்: டிச.2 வரை வயது வரம்பு சலுகை

செய்திப்பிரிவு

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்கான வயது வரம்பு சலுகை டிசம்பர் 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக சென்னை வடக்கு கோட்ட அஞ்சல்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வடக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கி.ரவீந்திரன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

பெண் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெயரில் மட்டுமே கணக்கு தொடங்க முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால், 12 வயதாகும் குழந்தைகளுக்குகூட (2003 டிசம்பர் 2-ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள்) செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சலுகையை வரும் டிசம்பர் 12-ம் தேதி வரை நீட்டிக்க உள்ளோம். இதையொட்டி சென்னை வடக்கு அஞ்சல் கோட்டத்துக்கு உட்பட்ட அண்ணா நகர், அயனாவரம், கோயம்பேடு, பெரம்பூர், புளியந்தோப்பு, வியாசர்பாடி, வேப்பேரி, தண்டையார்பேட்டை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதுதொடர்பாக மேலும் விவரம் அறிய 9445402822 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT