திருப்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட வட மாநிலத் தொழிலாளர்கள். 
தமிழகம்

திருப்பூர் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு பயணச்சீட்டு வழங்குவதாக தகவல் பரவியதால், திருப்பூர் ரயில் நிலையத்தில் நேற்று ஏராளமான தொழிலாளர்கள் திரண்டனர். எனினும், இது வதந்தி என்றும், பயணச்சீட்டு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறவில்லை என்றும் அதிகாரிகள் மற்றும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஏமாற்றமடைந்த தொழிலாளர்கள், தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறும்போது, "மற்ற மாவட்டங்களில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள், அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் காலதாமதம் செய்கிறது" என்றனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர்களை சமாதானப்படுத்தினர்.

ஆட்சியரின் ஆடியோ

இதற்கிடையே, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், இந்தியில் பேசிய விழிப்புணர்வு ஆடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அதில், "வெளி மாநிலம் செல்ல பயணச்சீட்டு தருகிறோம். டோக்கன் தருகிறோம் என்று யாராவது கூறினால், அதை நம்பவேண்டாம். இதுவரை அப்படி எதுவும் வழங்கவில்லை. எந்த தகவலாக இருந்தாலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT