பாதிக்கப்பட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள் 
தமிழகம்

உணவும் இல்லாமல், சொந்த ஊரும் திரும்ப முடியாமல் கும்பகோணத்தில் வடமாநிலத்தவர்கள் 100 பேர் தவிப்பு

வி.சுந்தர்ராஜ்

போதிய உணவும் இல்லாமல், சொந்த ஊரும் திரும்ப முடியாமல் வடமாநிலத்தைச் சேர்ந்த 100 பேர் கும்பகோணத்தில் தவித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அசாம், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்து கம்பளி போர்வைகள், எலக்ட்ரிக் பொருட்கள், பானி பூரி ஆகியவற்றை விற்பனை செய்வதற்காக கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வந்து தங்கியுள்ளனர்.

கும்பகோணம் மோதிலால் தெரு, ஜான்செல்வராஜ் நகர் பகுதிகளில் வாடகை வீடுகளில் தங்கியுள்ள இவர்கள், கரோனா ஊரடங்கால் கையில் பணம் இல்லாமலும், உணவுப் பொருட்கள் வாங்க முடியாமலும், சொந்த ஊர் திரும்ப முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் இன்று (மே 8) அசாமை சேர்ந்த 15 பேர் கும்பகோணம் நகராட்சி அலுவலகத்துக்குச் சென்று தாங்கள் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

அதே போல், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 10 பேர் கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்துக்கு வந்து சொந்த ஊர் செல்ல உதவி கோரினர்.

இதுகுறித்து உத்தரப்பிரதேச மாநிலம் முஸாபர் நகரைச் சேர்ந்த சல்மான் (30) கூறியதாவது:

"போர்வை விற்பனை செய்ய இரு மாதங்களுக்கு முன் கும்பகோணம் வந்தோம். என்னைப் போன்று பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என 100 பேர் வடமாநிலத்தவர்கள் தங்கியுள்ளோம். ஊரடங்கு காரணமாக கையில் பணம் இல்லாமலும், உணவு பொருட்கள் கிடைக்காமலும், சொந்த ஊர் திரும்ப முடியாமலும் அவதிப்படுகிறோம். எங்களுக்கு மொழிப்பிரச்சினை வேறு இருப்பதால் நாங்கள் யாரிடமும் உதவி கேட்க முடியவில்லை. எங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT