தமிழகம்

புற்றுநோய் பாதித்த பெண்ணை நிவாரண பொருட்கள் வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பிய மதுரை ஆட்சியர்

கி.மகாராஜன்

மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண் சொந்த ஊர் செல்வதற்கு மதுரை ஆட்சியர் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர் உதவினர்.

புதுக்கோட்டை கறம்பக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் மார்பகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

அவரை அறுவை சிகிச்சை செய்யாமல் ஒரு மாதமாக மருத்துவமனையிலேயே வைத்திருந்தனர். பின்னர் ஒரு மாதத்துக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கி மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்பினர்.

ஊரடங்கு நேரத்தில் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்த அந்தப்பெண் கணவருடன் மதுரை ஆட்சியரை நேரில் சந்தித்து உதவி கேட்டார். இதையடுத்து அப்பெண் சொந்த ஊர் செல்ல உடனடியாக ஆட்சியர் அனுமதி சீட்டு வழங்கினார்.

அவருக்கு செஞ்சிலுவை சங்க அவைத் தலைவர் ஜோஸ், செயலர் கோபாலகிருஷ்ணன், வழக்கறிஞர் முத்துகுமார், தினேஷ், மைதிலி ஆகியோர் ஒரு மாதத்துக்கு தேவையான நிவாரண பொருட்கள், சொந்த ஊர் செல்ல இலவச வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

இதையடுத்து அந்தப் பெண் சொந்த ஊருக்கு சென்றார்.

SCROLL FOR NEXT