தமிழகம்

சிவகங்கை மாவட்ட ரேஷன்கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம்: குடும்ப அட்டைதாரர்கள் அதிருப்தி

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்ட ரேஷன்கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் செய்வதால் குடும்ப அட்டைதாரர்கள் அதிருப்தி அடைந்தனர்.

கரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அனைவரும் வீட்டிலேயே முடங்கியதால் பலர் வருமானமின்றியும், உணவுப்பொருட்கள் வாங்க முடியாமலும் தவிக்கின்றனர்.

இதையடுத்து அரசு சார்பில் நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த மாதம் ரூ.1,000 ரொக்கம், அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் இலவசமாக வழங்கப்பட்டது.

மேலும் பிரதமர் கரீப் கல்யாண் அன்னயோஜனா என்ற சிறப்புத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அரசு தெரிவித்தது.

ஆனால் சிறப்புத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட அரிசி ஏப்ரல் மாதம் வழங்கவில்லை.

இதையடுத்து இந்த மாதம் வழக்கமாக வழங்கப்படும் மாதாந்திர அரிசி, இந்த மாதத்திற்குரிய சிறப்புத் திட்ட அரிசி மற்றும் கடந்த ஏப்ரலில் விடுப்பட்ட சிறப்புத் திட்டத்திற்குரிய அரிசியில் 50 சதவீதம் ரேஷன்கடைகளில் வழங்கப்படுகிறது.

இதையடுத்து ஒவ்வொரு குடும்பத்திற்கு குறைந்தது 50 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் 3.8 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான ரேஷன்கடைகளில் அரிசி தரமற்று வழங்குவதால் குடும்ப அட்டைதாரர்கள் அதிருப்தி அடைந்தனர்.

SCROLL FOR NEXT