முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வரப்பெற்றுள்ள நிதி விவரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தலால் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணிகளுமே நடைபெறவில்லை. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், பொருளாதார இழப்பை சமாளிக்கவும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதியளிக்கலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.
பல்வேறு தொழில்துறை நிறுவனங்கள், அரசியல் பிரபலங்கள், அரசு ஊழியர்கள், திரையுலக பிரபலங்கள் என முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியளிக்கத் தொடங்கினார்கள். அதன்படி மே 6-ம் தேதி வரை எவ்வளவு தொகை வந்துள்ளது என்பது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"கரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்த நிவாரணப் பணிகளுக்கென முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசு சார் நிறுவன ஊழியர்கள், அரசு சார் வாரியங்கள், மற்றும் பொது மக்களிடமிருந்து 30.4.2020 அன்று வரை, மொத்தம் 306 கோடியே 42 லட்சத்து 10 ஆயிரத்து 558 ரூபாய் வரப்பெற்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, 1.5.2020 முதல் 5.5.2020 வரை ஆகிய ஐந்து நாட்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மனமுவந்து நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள்:
* தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 20 கோடி ரூபாய்
* ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் 5 கோடி ரூபாய்
* எம்.ஆர். எப் பவுண்டேஷன் 4 கோடி ரூபாய்
* அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் 3 கோடியே 70 லட்சம் ரூபாய்
* இந்தியன் வங்கி 1 கோடி ரூபாய்
* எச்.வி.எப் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சார்பாக 66 லட்சத்து 67 ஆயிரத்து 470 ரூபாய்
* தமிழ்நாடு கிராம வங்கி 25 லட்சத்து 38 ஆயிரத்து 514 ரூபாய்
* மத்திய அரசின் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் 15 லட்சத்து 89 ஆயிரம் 535 ரூபாய்
* தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறை முதுநிலை பொறியாளர்கள் சங்கம் 15 லட்சத்து 78 ஆயிரத்து 708 ரூபாய்
* மோபிஷ் இந்தியா பவுண்டேஷன் 15 லட்சம் ரூபாய்
* தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் 14 லட்சத்து 65 ஆயிரத்து 999 ரூபாய்
* திருவாவடுதுறை ஆதீன கர்த்தார் 12 லட்சம் ரூபாய்
* ராயின் 10 லட்சம் ரூபாய்
* கோனே எலிவேட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் 10 லட்சம் ரூபாய்
* பிரிமியர் பைன் லைன்ஸ் பிரைவேட் லிமிடெட் 10 லட்சம் ரூபாய்
* Stahli இந்தியா பிரைவேட் லிமிடெட் 10 லட்சம் ரூபாய்
* ஸ்ரீ சந்தான கிருஷ்ண சில்க்ஸ் 10 லட்சம் ரூபாய்
மேற்கண்ட ஐந்து நாட்களில் மட்டும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து 41 கோடியே 34 லட்சத்து 4 ஆயிரத்து 882 ரூபாய் வரப்பெற்றுள்ளது. இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 347 கோடியே 76 லட்சத்து 15 ஆயிரத்து 440 ரூபாய் ஆகும்.
மேற்கண்ட நாட்களில் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் நிவாரண நிதி அளித்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், தொடர்ந்து அரசுக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், பத்து லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தாலும், சிறுகச் சிறுக சேமித்த தங்கள் பணத்தை மனமுவந்து அளித்த பொது மக்களுக்கும், முதல்வர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
மேலும், கரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ஆதரவாக, தங்களது ஒரு நாள் ஊதியத்தை மனமுவந்து அளித்த அனைத்து தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும், முதல்வர் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.