தமிழகம்

சென்னையில் மே 17 வரை 144 தடை அமல்; 5 பேருக்கு மேல் கூடக் கூடாது: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் சென்னையில் 144 தடை உத்தரவு வரும் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிவிப்பு:

கரோனா வைரஸ் பரவலைத்தடுக்கும் வகையில் தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி தொற்று நோய் சட்டம் மற்றும் 144(4) குற்றவியல் நடைமுறைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பொது இடங்களில்5-க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படும். எனவே, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள மே 17-ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது இந்திய தண்டனைசட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இந்த ஆணை பொதுமக்கள் நலன், பாதுகாப்பு மற்றும் பொதுஅமைதியை நிலை நாட்டும்பொருட்டு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT