தமிழகம்

பூரண மதுவிலக்கு கோரி மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

செய்திப்பிரிவு

பூரண மதுவிலக்கு என்பது அரசின் கொள்கை முடிவு எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சென்னையைச் சேர்ந்த, ஆர்.தனசேகரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், “இந்தியாவில் இதுவரை 33 லட்சம் பேர் மது குடித்ததால் இறந்துள்ளனர். இவர்களில், 18 லட்சம் பேர், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக, அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டபோதும், அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை.

ஊரடங்கு காரணமாக மதுக் கடைகள் மூடப்பட்ட போதிலும், கள்ளச்சாராய விற்பனை இல்லை. குற்றங்கள் குறைந்துள்ளன. மதுப் பழக்கத்தைப் பலரும் கைவிட்டு வருவதால், பூரண மதுவிலக்கை அமல்படுத்தும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஊரடங்கு முடிந்த பின்னும், மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என, உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா அமர்வு முன் இன்று காணொலிக் காட்சியில் விசாரணைக்கு வந்த போது, அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயணன், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்தார். மேலும், எங்கெல்லாம் மதுக்கடைகளைத் திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தாலும், தமிழத்தில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT