மதுரையில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெருங்கோயில்களின் அர்ச்சகர்களுக்கு திமுக சார்பில் கரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி, ஒத்தக்கடை நரசிங்க பெருமாள் கோயிலில் நடந்தது.
அழகர்கோயில், நரசிங்க பெருமாள் கோயில், மதுரை சக்கரத்தாழ்வார் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பணிபுரியும் 64 அர்ச்சகர்கள் இந்த நிவாரண உதவிகளைப் பெற்றனர்.
மதுரை மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் மா.ஜெயராம் நிவாரண உதவிகளை வழங்கினார். "அர்ச்சகர்கள் சிலர் உதவி செய்ய முடியுமா? என்று கேட்டார்கள். யார் உதவி கேட்டாலும் செய்யச் சொல்லி எங்கள் தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதால், 100 பேருக்குத் தேவையான 5 கிலோ அரிசி, 5 கிலோ காய்கனிகள், 1 கிலோ துவரம் பருப்பு, அரை லிட்டர் நல்லெண்ணெய் அடங்கிய தொகுப்பைக் கொண்டுவந்திருந்தோம்.
64 அர்ச்சகர்கள், 29 கோயில் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினோம். மீதமிருந்த 7 தொகுப்புகளைக் கோயில் வாசலில் அமர்ந்திருந்த ஏழைகளுக்குக் கொடுத்தோம். நாளை தொ.மு.ச. ஆட்டோ தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க உள்ளோம்" என்றார் ஜெயராம்.