ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு செய்துள்ள தமிழக அரசு, தொழில் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதை மீறுவோர் மீது தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
ஊரடங்கு மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை தமிழக அரசு நேற்று முன்தினம்அறிவித்தது. இதுகுறித்து அரசாணையில் கூறியிருப்பதாவது:
தொழிற்சாலைகளை மீண்டும் தொடங்கும்போது கண்டிப்பாகபின்பற்ற வேண்டிய நடைமுறை கள்:
நோய்த்தொற்று தடுப்பு பகுதி களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது.
தினசரி நோய்த்தொற்று தடுப்புபகுதி விவரங்களை மாவட்ட ஆட்சியரிடம் பெற்று அதை தொழிற்சாலை நுழைவு வாயிலில் அனைவருக்கும் தெரியுமாறு வைக்க வேண்டும். மருத்துவரீதியில் தகுதிபெற்ற தொழிலாளர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுகிறார்கள் என்பதை நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும்.
தொழிற்சாலைகளில் பணியை தொடங்கும் முன்பு பின்பற்ற வேண்டியவை:
பணிக்கும் வரும் தொழிலாளர்கள் வீட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக தங்களை சுயமாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இருமல், ஜலதோஷம், காய்ச்சல் இருக்கும் பணியாளர்கள் டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
55 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களை முற்றிலும் பரிசோதனைசெய்வதுடன் அவர்களை வீட்டில்இருந்து பணிபுரிய அனுமதிக்கலாம். பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிக்குச் செல்லும்போதும், திரும்பும்போதும் கண்டிப்பாக நிறுவனம் வழங்கிய அடையாள அட்டையை அணிந்திருக்க வேண் டும். கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும்.
மருத்துவ, போக்குவரத்து வசதி
200 பணியாளர்கள் வரை பணியாற்றும் தொழில் நிறுவனங்களில் தொலைபேசியில் அழைத்தால் டாக்டர் உடனடியாக வரக்கூடிய ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். 200 முதல் ஆயிரம் பேர் பணியாளர்கள் வேலைபார்க்கக்கூடிய நிறுவனமாக இருப்பின் அங்கு 2 நாட்களுக்கு ஒருமுறை உள்ளூர் டாக்டர் வந்துசெல்ல வேண்டும்.
1,000 பேருக்கு மேற்பட்ட பணியாளர்கள் இருந்தால் அந்நிறுவனத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி செய்யப்பட்டிருப்பதுடன் தினசரி டாக்டர் வந்துசெல்ல வேண்டும். வெளியிடங்களில் இருந்து வரும் பணியாளர்களுக்கு நிர்வாகம் சிறப்பு போக்குவரத்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளவாகனத்தில் மொத்த இருக்கைகளில் 50 சதவீத இருக்கையில் பணியாளர்கள் நன்கு இடைவெளி விட்டு அமர வேண்டும்.
நிறுவனத்துக்கு வரும் ஒவ்வொருவரையும் அவர்கள் வரும்போதும் திரும்பிச் செல்லும்போதும் தெர்மல் ஸ்கேனிங் செய்ய வேண்டும்.
பணியாளர்கள் நிறுவனத்துக்கு வரும்போதும், பணிமுடிந்து செல்லும்போதும் கண்டிப்பாக கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும். நிறுவனத்துக்கு வந்துசெல்லும் ஒவ்வொருவரும் முக கவசம் அணிய வேண்டும்.
நிறுவன வளாகத்தை தினமும் காலையிலும் மாலையிலும் 2 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். கேன்டீன்களில் எப்போதும் சமூக இடை வெளி பின்பற்றப்பட வேண்டும்.
மின்தூக்கிகளில் உடல் பரும னுக்கு ஏற்ப 2 அல்லது 4 பேருக்கு மேல் செல்ல அனுமதிக்கக்கூடாது.
கட்டுமான பணியைப் பொறுத்தவரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதி களில் இருந்து யாரும் வேலைக்கு வர அனுமதிக்கக்கூடாது. வேலைக்கு வருவோருக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும்.
அடிக்கடி கை கழுவுதலும் முகக் கவசம் அணிவதும் கட்டாயம். கட்டுமானப் பணியை எவ்வாறு பாதுகாப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக போதிய அளவு கண்காணிப்பாளர்களை நியமிக்க வேண்டும்.
அனைத்துப் பகுதிகளிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். கட்டுமானப் பணி நடைபெறும் இடத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் கிருமி நாசினி தெளித்த பிறகே அனுமதிக்கப்பட வேண்டும். குட்கா, புகையிலை பயன்படுத்த தடை விதிக்க வேண் டு்ம்.
கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். அவரது குடும்பத்தினர், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்து, அவர்களை வீட்டுக் கண்காணிப்பிலோ அல்லது அரசு கண்காணிப்பிலோ வைக்க வேண்டும். அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து கண்காணிக்க வேண்டும்.
மேற்கண்ட விதிமுறைகளை மீறுவோர் மற்றும் விதிமுறை மீறல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.