தமிழகம்

உயர் நீதிமன்ற கிளைக்கு உட்பட்ட நீதிமன்றங்களின்  இடைக்கால உத்தரவுகள் ஜூன் 1 வரை நீட்டிப்பு

கி.மகாராஜன்

உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களின் இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இடைக்கால உத்தரவுகள், மதுரை கிளைக்கு உட்பட்ட அனைத்து கீழமை நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகள், நிபந்தனைகளுடன் வழங்கப்பட்ட ஜாமீன், முன்ஜாமீன், பரோல் உத்தரவுகள் ஏப். 30-ம் தேதி வரை நீட்டித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை மார்ச் 27-ல் உத்தரவிட்டது.

இந்த காலக்கெடு நேற்றுடன் முடிந்த நிலையில் இடைக்கால உத்தரவுகளை ஜூன் 1 வரை நீட்டித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டி.கிருஷ்ணவள்ளி அமர்வு பிறப்பித்த உத்தரவு:

கரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்புடன் இடைக்கால உத்தரவுகள் ஏப். 30 வரை நீட்டிக்கப்பட்டது.

இருப்பினும் சில மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகமாக இருப்பதாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. இதன் காரணமாக மதுரை உட்பட 4 மாநகராட்சிகளில் 4 நாள் முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டது.

இந்த அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் ஜூன் 1 வரை நீட்டிக்கப்படுகிறது. சிறை கைதிகளின் காவல் நீட்டிப்பு உத்தரவுகள் கைதிகளின் ஜாமீன் உரிமையை பாதிக்காத வகையில் தொடரும்.

ஒருவேளை ஜூன் 1-க்கு முன்பு குற்றவியல் நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கினால் காவல் நீட்டிப்பு உத்தரவுகளை வீடியோ கான்பரன்ஸ் அல்லது பிற அனுமதிக்கப்பட்ட வழிமுறைகள் அல்லது நீதித்துறை நடுவர் நேரில் சிறைக்கு சென்றும் பிறப்பிக்கலாம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT