தமிழகம்

முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு கோரி அரசு மருத்துவர்கள் வழக்கு: சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

கி.மகாராஜன்

முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கில் சுகாதாரத்துறை முதன்மை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் கன்னிவாடியைச் சேர்ந்த சந்தியா பிரியதர்ஷினி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ பட்டய படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்தாண்டு முதுநிலை மருத்துவ பட்டய படிப்புகளுக்கு மட்டுமே 50 சதவீத இடஒதுக்கீடு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் முதுநிலை மருத்துவ படிப்பு பயில விரும்பும் அரசு மருத்துவர்கள் 50 சதவீத இடஒதுக்கீடு சலுகையை பெற முடியாத நிலை உள்ளது.

எனவே முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளிலும் பணியிலுள்ள அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் வீடியோ கான்பரன்ஸ்சில் விசாரித்தார்.

மனு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர் பதிலளிக்க வேண்டும். முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு மற்றும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு உட்படும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 2-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

          
SCROLL FOR NEXT