குழந்தையுடன் தாய் அங்காள பரமேஸ்வரி. 
தமிழகம்

'இந்து தமிழ்' இணையதள செய்தி எதிரொலி: பச்சிளங் குழந்தையின் முதுகில் உள்ள கட்டியை அகற்ற சிவகங்கை ஆட்சியர் நடவடிக்கை

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளங் குழந்தையின் முதுகில் உள்ள கட்டியை அகற்ற மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் நடவடிக்கை எடுத்தார்.

மானாமதுரை அழகர்கோவில் தெருவைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி முத்துப்பாண்டி. அவரது மனைவி அங்காள பரமேஸ்வரி. இவர்களுக்கு ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அங்காள பரமேஸ்வரிக்கு ஏப்.21-ம் தேதி மானாமதுரை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு முதுகில் கட்டி இருந்தது.

இதையடுத்து, அக்குழந்தை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இந்நிலையில், அங்கு கரோனா தொற்று பரவி வருவதால், போதிய மருத்துவர்கள் இல்லை எனக்கூறி அந்தக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், அக்குழந்தைக்குத் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய பல லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. அதற்குரிய பணம் இல்லாததால் அக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் பெற்றோர் தவித்து வந்தனர்.

இதையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் மதுரை அப்போலோ மருத்துவனையில் அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து, அக்குழந்தையின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரை மனதாரப் பாராட்டினர்.

SCROLL FOR NEXT