சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கோடையில் களைகட்ட வேண்டிய மண்பாண்டத் தொழில் கரோனா ஊரடங்கால் முடங்கியது. இதனால் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மானாமதுரையில் தயாராகும் மண்பாண்ட பொருட்களுக்கு தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது.
மானாமதுரை குலாலர் தெரு, உடைகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மண்பாண்டப் பொருட்கள் தயாரிப்பது பிரதான தொழிலாக உள்ளது.
இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன. மண்பானைகள், அக்னிச்சட்டிகள், அகல்விளக்குகள், கலைப்பொருட்கள், அடுப்புகள், விநாயகர் சிலைகள், சமையல் சட்டிகள், கூஜாக்கள், ஜாடிகள், இசைக்கருவியான கடம் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
கோடைக்காலத்தில் குடிநீரை குளிர்ச்சியாக மாற்றும் மண்பானை, ஜாடி, கூஜாக்களுக்கு அதிக மவுசு உண்டு. இந்தாண்டு கரோனா பாதிப்பால் மண்பாண்டத் தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
மானாமதுரை மண்பாண்ட கூட்டுறவு தொழிற்சங்க தலைவர் லெட்சுமணன் கூறுகையில், ‘‘குறைந்த வருமானம் என்றாலும் பரம்பரை தொழிலாளாக மண்பாண்டம் தயாரித்து வருகிறோம்.
கோடையில் தான் அதிக வருவாய் கிடைக்கும். கரோனாவால் தொழில் பாதிக்கப்பட்டு, வருமானத்தை இழந்து நிற்கிறோம். பாதிப்பை ஈடுகட்ட நிவாரணம் வழங்க வேண்டும்" என்று கூறினார்.