தமிழகம்

சிறுத்தை வேட்டையாடச் செல்வதாக டிக் டாக் பதிவிட்ட 4 பேர் கைது

அசோக் குமார்

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், மைப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாகராஜ், மாரிச்சாமி, ஆனந்தராஜ், ஆனந்தகுமார். இவர்கள் 4 பேரும் சேர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மைப்பாளை கிராமத்தில் உள்ள பூனைப்பாறை பகுதியில் சிறுத்தை வேட்டையாடச் செல்வதாக டிக் டாக் பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த 4 பேரையும் கோவில்பட்டி வனத்துறையினர் பிடித்து, சங்கரன்கோவில் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வனச்சரக அலுவலர் ஸ்டாலின் மற்றும் வனத்துறையினர் அந்த 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், பிரபலமாக வேண்டும் என்பதற்காக சிறுத்தை வேட்டையாடச் செல்வதாக போலியாக டிக் டாக் பதிவிட்டதும், இருப்பினும் வன விலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் 1.20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதுபோன்று டிக் டாக்கில் பதிவிடும் நபர்கள் மீது வனத்துறை சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுத்து, கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT