விழுப்புரம் நகரில்  ஊரடங்கின்போது சாலையில் பயணிக்கும் வாகனங்கள் | கோப்புப் படம். 
தமிழகம்

விழுப்புரம் நகரில் மட்டும் 33 பேர் கரோனாவால் பாதிப்பு: ஆட்சியர் தகவல்

எஸ்.நீலவண்ணன்

தமிழகம் முழுவதும் நேற்று வரை 1,821 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நேற்று மட்டும் 66 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் விழுப்புரம் நகரைச் சேர்ந்தவர் ஒருவர் ஆவார்.

விழுப்புரம் மாவட்டத்தில் சமூகப் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக வாரத்தில் 6 மட்டும் பொதுமக்கள் பகுதி பகுதியாக வெளியே வருவதற்கு வண்ண அட்டைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் வணிகர்கள் தன்னிச்சையாக வாரம் மூன்று நாட்கள் மட்டும் கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்தனர்.

இதனால் நேற்று நகர சாலைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. பொதுமக்களை எப்படிக் கட்டுப்படுத்துவது எனத் தெரியாமல் போலீஸார் திணறினர். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வாரம் 6 நாட்கள் பகுதி பகுதியாக பொதுமக்கள் வருகை தரும் பழைய முறையே பின்பற்றப்படும் எனவும், விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வரை 43 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 22 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், தற்சமயம் 19 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் நகரில் மட்டும் 33 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை மீறியதாக நேற்று வரை 5,989 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6,085 பேர் கைது செய்யப்பட்டும், 4497 இருசக்கர வாகனங்கள், 89 மூன்று சக்கர வாகனங்கள் ,79 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 148 நகராட்சிகளில் விழுப்புரம் நகராட்சியில்தான் அதிக அளவாக 33 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT