தமிழகத்தில் 33 பேருக்கு இன்று தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 1,629 ஆக உயர்ந்துள்ளது. 2-வது நாளாக 27 மாவட்டங்களில் புதிய நோயாளிகள் இல்லை.
இன்றும் சென்னையில் அதிக அளவில் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தொடர்ச்சியாக மருத்துவ சோதனையில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஊரடங்கு காலத்தில் வீட்டில் தனிமையில் இருப்பது குறித்து அரசு வலியுறுத்தி வந்தபோதும் பலரும் அதைக் கடைப்பிடிப்பதில்லை. இதனால் நோய்த்தொற்று பரவுதல் அதிகரித்து வருகிறது.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று முதல்வர் பழனிசாமி, 19 மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக கூடுதலாக 2 ஐஏஎஸ் அதிகாரிகளை சென்னை நிர்வாகத்தைக் கவனிக்க நியமித்துள்ளார்.
தமிழகத்தில் ரேபிட் டெஸ்ட் மற்றும் பிசிஆர் சோதனை நடத்தப்படுகிறது. இந்தநிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:
*தமிழகத்தில் நேற்றுவரை தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 972 பேர்.
* 28 நாட்கள் தனிமைப்படுத்துதலைப் பூர்த்தி செய்தவர்கள் 87ஆயிரத்து159 பேர்.
*தற்போது தனிமையில் இருப்பவர்கள் 23 ஆயிரத்து 760 பேர்.
* அரசு கண்காணிப்பில் இருப்பவர்கள் 155 பேர்.
* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரி 59,023.
* மாதிரி எடுக்கப்பட்ட தனி நபர்கள் எண்ணிக்கை 53,072.
* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 5,978 .
* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 33.
* இன்றைய மொத்த எண்ணிக்கை 1,629 .
* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 27 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 662 பேர்.
* மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 15 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் 358 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை 134, திருப்பூர் 109, திண்டுக்கல் 77 ,ஈரோடு 70 என்கிற எண்ணிக்கையுடன் உள்ளது. குறிப்பிட வேண்டிய முன்னேற்றமாக தொடர்ந்து 2 நாட்களாக 27 மாவட்டங்களில் புதிதாக கரோனா பாதிப்பு வரவில்லை.
இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.