தஞ்சாவூரில் நேற்று முஸ்லிம் அறக்கட்டளை சார்பில் அர்ச்சகர் ஒருவருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. 
தமிழகம்

கோயில் அர்ச்சகர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய முஸ்லிம்கள்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளதால், அனைத்து கோயில்களும் மூடப்பட்டுள்ளன. மேலும், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளும் நடத்தப்படாததால், சிறிய கோயில்களின் அர்ச்சகர்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

இந்நிலையில், தஞ்சாவூர் அய்யங்கடைத் தெரு பள்ளிவாசல் இமாம் முகமது ருஸ்தும் அலி ஏற்பாட்டின்படி, ரசாஏ முஸ்தபா அறக்கட்டளை சார்பில், தஞ்சாவூர் வடக்கு வீதியில் உள்ள விநாயகர் கோயிலில், அப்பகுதியில் உள்ள 15 இந்து கோயில் அர்ச்சகர்களின் குடும்பங்களுக்கு நேற்று தலா ரூ.800 மதிப்புள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகி சையது முதஹர் கூறியபோது, “ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினோம். தற்போது, சாதி, மதம் பாராமல் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதைக் காட்டும் வகையில், கோயில் அர்ச்சகர்களுக்கும் வழங்கியுள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT