எட்டயபுரம் பேரூராட்சி சார்பில் அரசு கட்டிடச் சுவர்கள் மற்றும் தார்ச்சாலைகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஓவியம் வரையும் பணிகள் நடைபெற்று வருகிறது.
எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தலைமையில் கரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்களிடையே ஒலிப்பெருக்கி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், பேரூராட்சி வார்டு பகுதி முழுவதும் கிருமி நாசினி திரவ கரைசல் தெளிக்கப்பட்டு சாலையோரங்களில் பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.
தற்போது பேரூராட்சிக்கு உட்பட்ட முக்கிய சந்திப்புகளில் உள்ள சுவர்கள், அரசு கட்டட சுற்றுச்சுவர்கள் மற்றும் தார்ச்சாலைகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு குறித்த ஓவியங்கள் பல்வேறு வண்ணங்களில் வரையப்பட்டு வருகின்றன.
எட்டயபுரம் பேருந்து நிலையம் அருகே தூத்துக்குடி, விளாத்திகுளம் சந்திப்பு நெடுஞ்சாலை வளைவில் தனித்திரு, விழித்திரு, விலகி இரு என்ற வாசகங்களுடன் மெகா சைஸ் வடிவத்தில் வரையப்பட்டுள்ள கரோனா விழிப்புணர்வு வர்ண ஓவியம் அவ்வழியாக செல்வோர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளை தவிர மக்கள் வேறு எதற்காக வெளியே வரக்கூடாது என்பதற்காக தான் சாலைகளிலும் ஓவியம் வரையப்பட்டு வருகிறது என அலுவலர்கள் தெரிவித்தனர்.