தமிழகம்

28,198 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி: அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நிவாரண உதவியை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்.

தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசின் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன், பி.சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் ஆகியவற்றை வழங்கி தொடங்கி வைத்தார். மொத்தம் 28 ஆயிரத்து 198 பேருக்கு இந்தநிவாரண உதவி வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 185 திருநங்கைகளுக்கு கரோனா நிவாரணத்தொகை ரூ.1000 வழங்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார். மேலும், தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் சார்பில் 1,250 கிலோ அரிசி, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு தேவையான படுக்கைகள் வாங்குவதற்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலை ஆகியவற்றை ஸ்பிக் நிறுவன இயக்குநர் ராமகிருஷ்ணன், அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் வழங்கினார்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவர் சுதாகர், மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதா, தொழிலாளர் துணை ஆணையர் அப்துல்காதர் சுபைர், உதவி ஆணையர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT