தமிழகம்

சர்வதேச பொருளாதார நெருக்கடி தவிர்க்க முடியாதது; உலக நாடுகள் பணப்புழக்கத்தை அதிகரிக்க 14 லட்சம் கோடி டாலர் விடுவிப்பு

செய்திப்பிரிவு

கரோனா வைரஸால் உலக நாடுகள் முடங்கியுள்ள நிலையில், பொருளாதார நெருக்கடி தவிர்க்கமுடியாதது. இதை சமாளிக்க உலகநாடுகள் அனைத்தும் 14 லட்சம்கோடி டாலர் அளவுக்கு மானியஉதவி மற்றும் பிற சலுகைகளுக்காக விடுவித்துள்ளது என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) தெரிவித்துள்ளது.

கரோனா பரவலை முற்றிலும் தடுத்துவிட்டதாக சர்வதேச சமூகம் அறிவிப்பு வெளியிடுவதற்கான வாய்ப்புகள் மிக அருகில் இல்லை என்பது மட்டும் தெரிகிறது என்றுஐஎம்எப் நிதிக் குழு தலைவர் லெஸட்ஜா கயன்யாகோ தெரிவித்துள்ளார்.

அனைத்து நாடுகளின் மத்தியவங்கிகள் இதுவரை நிதிப்புழக்கத்தை அதிகரிக்கவும், பல்வேறு சலுகைகளுக்காகவும் விடுவித்த தொகை 8 லட்சம் கோடி டாலர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழல் நமது மக்களை வெகுவாக பாதித்துள்ளது. பெரும்பாலான நாடுகள் இப்போது சுகாதார பணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகள், வேலையிழந்த ஊழியர்கள், முடங்கியுள்ள தொழில்களை காக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் அதிக பாதிப்புக்குள்ளாகும் ஏழை நாடுகளுக்கு உதவ ஐஎம்எப் உறுதியுடன் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மாத இறுதிக்குள் 50 ஏழை நாடுகளுக்கு தேவையான உதவிகளை ஐஎம்எப் வழங்கும் என்று அதன் மேலாண் இயக்குநர் கிறிஸ்டிலினா ஜியாோர்ஜிவா தெரிவித்தார்.

பேரழிவு தடுப்பு மற்றும் நிவாரண நிதிக்கு இங்கிலாந்து, ஜப்பான், சீனா, நெதர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உதவி செய்துள்ளன. மேலும் வறுமை ஒழிப்புக்கு 1,700 கோடி டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வர்த்தக சர்ச்சை, நாடுகளிடையே கொள்கை வேறுபாடு, அரசியல் பதற்ற சூழல் ஆகியவை காரணமாக சர்வதேச பொருளாதார வளர்ச்சி விகிதம் மிகவும் சிக்கலானதாக இருந்த சூழலில் தற்போதுகரோனா வைரஸ் பரவல் தொற்றுஇதை மேலும் மோசமாக பாதித்துள்ளது என்று ஜியோர்ஜிவா குறிப்பிட்டார். இதன் காரணமாக2020-ம் ஆண்டில் மிக மோசமான பொருளாதார தேக்க நிலை உருவாவது தவிர்க்க முடியாத ஒன்று என்று அவர் குறிப்பிட்டார்.

சில உறுதியான நடவடிக்கைகளையும், கட்டுப்பாடுகளையும் சர்வதேச சமூகம் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய சூழலை கரோனா வைரஸ் பரவல் ஏற்படுத்திவிட்டது. இதிலிருந்து மீள்வதோடு பொருளாதார நெருக்குதலில் இருந்தும் நாடுகள் மீண்டு வர வேண்டியது கட்டாயமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT