தமிழகம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: மதுரையில் 104 டிகிரி வெயில் பதிவு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக தேனி, விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறியதாவது:

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பநிலை உயர்ந்து வருகிறது.

அதனால் வெப்பச் சலனம் ஏற்பட்டு தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் 3 செமீ, கலியார், சித்தார் ஆகிய இடங்களில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

அடுத்த சில தினங்களுக்கு திருச்சி, மதுரை, விருதுநகர், சேலம்,கரூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆகிய பகுதிகளில் வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெயில் அளவுகளின்படி 8 நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT