தமிழகம்

தமிழகத்தில் தினசரி 5 லட்சம் பேருக்கு பாஜக உதவி: மாநிலச் செயலாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் தகவல்

எஸ்.ஸ்ரீனிவாசகன்

தமிழகத்தி்ல் ஊரடங்கு பாதிப்பை தவிர்க்க தினசரி 5 லட்சம் பேருக்கு பாஜக சார்பில் உதவிகள் வழங்கப்படுகிறது என பாஜக மாநில செயலாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஊரடங்கால் பாதி்க்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை பாஜக செய்து வருகிறது.

மோடி கிச்சன் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு ஏழை மக்கள், புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள், ஆதரவற்றோருக்கு வழங்குகிறோம். நன்கொடை மூலம் பெறப்படும் அரசி, பலசரக்கு, முககவசம் உள்ளிட்ட பொருட்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்குகிறோம்.

இப்பணியில் மாவட்டத்திற்கு தலா 1000 பேர் ஈடுபட்டுள்ளனர். தினசரி 1 லட்சம் பேருக்கும் மேல் உணவு வழங்கப்படுகிறது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மட்டும் 100 டன்வரை அரசி வழங்கியுள்ளோம்.

ஆரோக்கிய சேது செயலியை அவரவர் செல்போன்களில் செயல்படுத்தி தருகிறோம்.

பாஜக சேவையில் தமிழகத்தில் தினசரி 5 லட்சம் பேர்வரை பயனடைகின்றனர். மற்ற கட்சியினரைப்போல் ஒரு நாள் மட்டும் உதவி என்றில்லாமல், தினசரி தொடர்ச்சியாக உதவிகளை செய்து வருகிறோம்.

கொள்முதல் செய்யப்படாத நெல், தமிழகத்தில் 5 கோடி தேங்காய்கள் தேக்கம் உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்சினைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

தமிழக தேவைக்காக குஜராத் ஊஞ்சாவில் பலசரக்கு, ராஜஸ்தானில் மல்லி, குண்டூரில் மிளகாய் மார்க்கெட்டுகளை செயல்படுத்த பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

மதுரை, சிவகாசி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிலதிபர்களுடன் காணொலி மூலம் ஆலோசித்து, இவர்களின் முக்கிய தேவைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அரசிற்கும், பாதிக்கப்பட்டோருக்கும் பாலமாக பாஜக செயல்படுகிறது என்றார்.

SCROLL FOR NEXT