தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு இந்திய துணைக் கண்டத்தில் ஜூன் 1-ம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:
''இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களின் நீர் ஆதாரத்தைப் பூர்த்தி செய்யும் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி கேரளாவில் தொடங்குகிறது. தமிழகத்தில் ஜூன் 4-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் மழை இயல்பான அளவில் இருக்கும்.
பொதுவாக தென்மேற்குப் பருவமழை இந்திய துணைக் கண்டத்தில் கேரளாவிலிருந்துதான் தொடங்கும். அதன் அடிப்படையில் கேரளாவில் ஜூன் 1-ம் தேதி தொடங்கும். தமிழகத்தில் அக்டோபர் 15-ம் தேதி தென்மேற்குப் பருவமழை முடிவடையும். அதன் பின்னர் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கும்.
இந்த வருடம் தென்மேற்குப் பருவமழை இந்தியா முழுவதும் இயல்பாக இருக்கும். சராசரியாக 88 செ.மீ. மழைப்பொழிவு இருக்கும். தொடங்கிய முதல் வாரத்தில் தென்னிந்தியப் பகுதிகள் முழுவதும் தென்மேற்குப் பருவமழை சென்றடையும். பின்னர் சிறிது தொய்வு நிலையை அடைந்து மீண்டும் இந்தியா முழுவதும் சென்றடையும். ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் ஒரு வாரம் முன்னதாகவே பருவக்காற்று சென்றடையும் .
பருவ நிலை மாற்றத்தால் இரண்டாம் பருவத்தில் பருவ மழை (அக்டோபர் மாதத்தில்) குறையும். தென்மேற்குப் பருவமழையை ஏற்படுத்தும் காரணியாக இருக்கும் Elnino - IOD ( எல்நினோ, ஐஓடி) வெப்பநிலை வேறுபாடு சமநிலையில் இருக்கும்”.
இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.