கரோனா பீதியால் கடலிலேயே நான்கு வாரம் தங்கியிருந்த 75 மீனவர்கள் பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை கடந்து நாகை, தூத்துக்குடி திரும்பினர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 40 மீனவர்கள் ஐந்து விசைப்படகுகளில் ஆழ்கடல் மீன்பிடிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதிக்கு முன்பே கேரளாவுக்குச் சென்றனர். கரோனா பரவல் காரணமாக இவர்கள் கொச்சி துறைமுகத்தில் அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து நாகப்பட்டினம் செல்வதற்காக பாம்பன் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாம்பன் ரயில் பாலம் திறப்பதற்காக கடலிலேயே திங்கட்கிழமை முதல் காத்திருந்தனர். அதே போல தூத்துக்குடியில் இருந்து மேற்குவங்க கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற 5 விசை ப்படகில் 35 மீனவர்கள் ஊர் திரும்புவதற்காக பாம்பன் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் காத்திருந்தனர். இந்நிலையில் ரயில் பாலப் பராமரிப்பு அதிகா ரிகள் மற்றும் பாம்பன் துறைமுக அதிகாரிகளுக்கு தூக்குப் பாலத்தைத் திறக்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீர ராகவ ராவ் புதன்கிழமை பிற்பகல் அனுமதி அளித்தார்.
தூக்குப் பாலம் திறந்ததும் பாம்பன் தெற்கு மன்னார் வளை குடா பகுதியில் 5 விசைப் படகுகளில் காத்திருந்த 40 மீனவர்களும், பாம்பன் வடக்கு பாக் ஜலசந்தி கடல் பகுதியில் 5 விசைப்படகுகளில் காத்திருந்த 35 மீனவர்களும் தூக்குப் பாலத்தை கடந்து நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடிக்குச் சென்றனர்.