சேலம் மாநகராட்சியின் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம் பட்டி ஆகிய 4 மண்டலங்களிலும் மொத்தம் 2,100 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். தற்போது, இவர்கள் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் மூலம் வாரம் இரண்டு முறை கரோனா தொற்று உள்ளதா? என மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதுவரை நடந்த பரிசோதனைகளில், யாருக்கும் கரோனா தொற்று இல்லை.
மேலும், மனநல மருத்துவர் மூலம் மன நல ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு தேவையான மளிகைப் பொருட்கள் ஏற்கெனவே மாநகராட்சி ஆணையர் சதீஷ் இலவசமாக வழங்கியுள்ளார்.
இவர்களுக்கு இதுநாள் வரை காலை ஒரு வேளை இலவச முட்டை வழங்கப்பட்டு வந்தது. நேற்று முதல் மதியமும் இலவச முட்டை வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.