திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளை மறுதினம் (16.4.2020) அன்று காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஊரடங்கு நடைமுறையில் இருக்கின்ற நேரத்தில் கரோனா நோய்த் தொற்று குறித்து முதலமைச்சர், அமைச்சர்களுடனும்,
அதிகாரிகளுடனும், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடனும் - ஏன், மருத்துவ நிபுணர்களுடனும், மதத் தலைவர்களுடனும் ஆலோசனைக் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டுள்ளன.
அந்த அடிப்படையில் கொடிய கரோனா நோய் குறித்து 15.4.2020 அன்று நடைபெறும் வகையில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு திமுக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் அந்தக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று காவல்துறை மூலம், அதிமுக அரசு நோட்டீஸ் கொடுக்க வைத்தது. தனி மனித இடைவெளி விட்டு, அரசின் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு, கூட்டம் நடத்தப்படும் என்று மீண்டும் திமுக சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டும். சென்னை மாநகர காவல்துறை, தி.மு.க.வின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அனுமதி மறுத்திருக்கிறது.
கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அதிமுக அரசு பிடிவாதமாகச் செய்வது போல், ஜனநாயக நெறிகளுக்கு முரணான அரசியல் செய்ய, திமுக சிறிதும் விரும்பவில்லை. தமிழக மக்களின் நலன் சார்ந்த பிரச்சினை குறித்து திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றும்; 16.4.2020 (வியாழக்கிழமை) காலை 11 மணி அளவில் அன்று அனைத்துக் கட்சிகளின் இந்த ஆலோசனைக் கூட்டம், காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.’’ எனக் கூறியுள்ளார்.