தமிழகம்

குமரியிலிருந்து ராஜஸ்தானுக்கு குடும்பத்துடன் பைக் பயணம்: கரோனா ஊரடங்கால் குல்ஃபி ஐஸ் தொழிலாளர்களின் பரிதாபம்

எஸ்.கோமதி விநாயகம்

கன்னியாகுமரியில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்துக்கு மோட்டார் சைக்கிள்களில் சென்ற 36 பேரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தூத்துக்குடி மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு, 24 மணி நேரமும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை தூத்துக்குடி மாவட்ட எல்லையான கயத்தாறு அருகே சன்னதுபுதுக்குடி பகுதியில் கயத்தாறு காவல் ஆய்வாளர் முத்து தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திருநெல்வேலியில் இருந்து 13 மோட்டார் சைக்கிள்களில் 36 பேர் வந்தனர். அவர்களை நிறுத்தி போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதில், அவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், கன்னியாகுமரி மாவட்டத்தில் கூலி வேலை (குல்பி ஐஸ்) செய்து வருவது தெரியவந்தது.

மேலும், கடந்த 21 நாட்களாக வேலை இல்லாததால், சாப்பாடு மற்றும் அன்றாட செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் திண்டாடி வந்துள்ளனர்.

இந்நிலையில், கன்னியாகுமரியில் இருந்து ராஜஸ்தானைச் சேர்ந்த 21 ஆண்கள், 6 பெண்கள், 9 குழந்தைகள் என 36 பேர் 17 மோட்டார் சைக்கிள்களில் தங்களது சொந்த மாநிலத்துக்கு புறப்பட்டனர்.

அவர்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட எல்லைகளில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடிகளைக் கடந்து காலை 11 மணிக்கு அளவில் தூத்துக்குடி மாவட்ட எல்லையான சன்னதுபுதுக்குடி காவல் சோதனைச்சாவடியை வந்தடைந்தனர் என்பது தெரியவந்தது.

தகவல் அறிந்து, கயத்தாறு வட்டாட்சியர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், ஊரடங்கு உள்ளதால் தற்போது வெளியே செல்லக்கூடாது என அறிவுரை வழங்கி, திருநெல்வேலி மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் பாதுகாப்புடன் அவர்கள் 36 பேரும் மீண்டும் அவர்களது மோட்டார் சைக்கிள்களில் கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT